மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எப்படி எதிர்க்கமுடியும்? என மேற்கு வங்க அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு திட்டங்களை பெறுவதற்கும் மானியங்களை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கிவரும் மத்திய அரசு, மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு சார்பில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து மாநில அரசு, எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக தனிநபர் வழக்கு தொடரலாம் என்ற அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். ஆனால் மாநில அரசு சார்பில், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை எதிர்த்து மம்தா பானர்ஜி, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர திட்டமிடுவதாக தெரிகிறது.