
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் உரிமைக்காக போராடி வருபவருமான கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசுசான்றிதழை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
"பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை நாட்டில் 80 ஆயிரம் குழந்தைகளை பல்வேறு சுரண்டல்களில் இருந்து மீட்டு, அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார்.
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராக உள்ள கைலாஷ் சத்யார்த்தி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உரிமை என்பதை வலியுறுத்தி வருகிறார்.
இந்த சேவையைப் பாராட்டி கடந்த 2014ம் ஆண்டு கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா என்ற சிறுமிக்கும்அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை ஆஷிஸ் சத்யார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், வீட்டில் விலை உயர்ந்த பொருட்களோடு நோபல் பரிசு சான்றிதழையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அவர்கள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “ கைலாஷ் சத்யார்த்தி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து, நாங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இப்போது சத்யார்த்தி வெளிநாடு சென்றுள்ளார். திருடர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.