அரசியலமைப்பு படுகொலை கர்நாடகாவில் தொடங்கிவிட்டதாகவும், அதனை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த வேதனையோடு பதிவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து வழக்கு போட்டது. விடிய விடிய நடந்த நீதிமன்ற விசாரணையில் இறுதியாக ஆளுநர் முடிவில் நீதிபதி தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர். கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநர் பா.ஜ.கவின் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் - மஜத கட்சியினர் தங்கள் எம்.எல்.ஏ.க்களுடன் விதான் சவுதாவில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். அப்போது பேசிய மஜத தலைவர் குமாரசாமி, அனைத்து மாநில கட்சிகளும் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக திரள வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் ஊழலைத்தான் துடைத்தெறிவேன் என்றார். ஆனால் ஜனநாயகத்தையே பிரதமர் மோடி துடைத்தெறிந்து விட்டார் என்று குமாரசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது என்றும் சந்தோஷமாக பார்த்துக்
கொண்டிருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது. இனி எந்த மக்கள், பிரச்சனை சிக்குகிறார்கள் என்ற அந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்எல்ஏக்கள் எங்கே செல்கிறார்கள், எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார் என்ற புகைப்படம், அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக பிரேக்கிங் செய்திகள் வரப்போகிறது. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.