
ஊழலைத் துடைப்பேன் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தை துடைத்தெறிந்து விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம்
சாட்டியுள்ளார். அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர், ஜெயா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 38 இடங்களையும் கைப்பற்றியது. 2 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கர்நாடக ஆளுநரிடம் குமாரசாமி கடிதம் கொடுத்தார்.
அதேபோல, தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் எடியூரப்பாவும் உரிமை கோரினார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விடிய விடிய விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஊழலை துடைப்பேன் என்ற மோடி ஜனநாயகத்தை துடைத்தெறிகிறார் என்று குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசியதாவது: ஆளுநர் வாஜுபாய் வாலா, அரசியல் சாசனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க, நான்கைந்து நாட்கள் தராமல், 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கதானே?
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி பணிய வைக்க முயல்கிறது. மத்திய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரசின் ஆனந்த்சிங் மிரட்டி வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி பணிய வைக்க முயல்கிறது.
அனைத்து மாநில கட்சிகளும் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக திரள வேண்டும். இதுபோன்ற ஜனநாயக படுகொலைக்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களின் கட்சிகளுடனும் இதுகுறித்து விவாதிக்க எனது தந்தை தேவகவுடா முயற்சி மேற்கொள்வார். அனைத்து தரப்புமே இணைந்து நாட்டு நலனுக்காக போராட வேண்டியது அவசியம் என்று ஆவேசமாக கூறினார்.
எடியூரப்பா முதலமைச்சர் ஆனதைக் கண்டித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நியாயம் கிடைக்கும்வரை போராடுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டு வருகின்றர். பெரும்பான்மை பலம் இல்லாத பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டவிரோதம் என்றும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.