
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நாளை மறுநாள் முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.
இந்த நீட் தேர்வின் போது பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கபட்டன. மேலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றனர்.
இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 13 க்கு பிறகு வெளியிடப்படும் எனுவும் நீதிமன்ற தடையால் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்திருந்தது.
மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து இதுகுறித்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாநில உயர் நீதிமன்றங்கள் நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தடை நீங்கியதையடுத்து ஒரு வாரத்தில் மருத்துவ விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.