நடிகை கேடக்கி சித்தாலேவுக்கு எதிராக ஸ்வப்நில் நெட்கே கொடுத்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
பேஸ்புக்கில் சர்த்பவார் குறித்து சர்ச்சை பதிவு போட்ட மராத்தி நடிகை கேடக்கி சித்தாலேவை தானே பகுதி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மராத்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த பதிவுகளில் சரத் பவாரை குறிப்பிடும் சொற்கள் இடம்பெற்று இருந்தது. வேறு யரோ எழுதிய பதிவை பகிர்ந்த நடிகை கேடக்கி சித்தாலே, அதனுடன் “நீங்கள் பிரமாணர்களை வெறுக்கிறீர்கள், உங்களுக்கு நரகம் காத்து கொண்டு இருக்கிறது,” என குறிப்பிட்டு இருந்தார்.
கடும் எதிர்ப்பு:
இவரது பதிவு வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆனதை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நடிகையின் பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதோடு தானே, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சர்ச்சை பதிவு போட்டதை அடுத்து நடிகைக்கு எதிராக மாநிலம் முழுக்க சுமார் 200-க்கும் அதிக காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இத்துடன் சர்ச்சை பதிவு போட்ட நடிகை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
விமர்சனம்:
“சரத்பவாருக்கு எதிரான அவதூறு பரப்பி எளிதில் விளம்பரத்தை தேடிக் கொள்ள முடியும் என்பதை மராட்டிய நடிகை பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்து கற்றுக் கொண்டு இருக்கலாம்,” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரிஸ்டோ விமர்சம் செய்து இருந்தார்.
ஒற்றை பதிவு சமூக வலைதளங்களை கடந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் தீவிரம் அடைந்ததை அடுத்து தானே காவல் நிலைய போலீசார் மராட்டிய நடிகை கேடக்கி சித்தாலேவை கைது செய்தனர். தானே மாவட்டத்தின் கல்வா காவல் நிலையத்தில் நடிகை கேடக்கி சித்தாலேவுக்கு எதிராக ஸ்வப்நில் நெட்கே கொடுத்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
வழக்குப் பதிவு:
கலம்போலி காவல் நிலையயத்திற்கு வெளியில் ஒன்று திரண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பினர் நடிகை சித்தாலே மீது முட்டை மற்றும் கருப்பு மை உள்ளிட்டவை வீசி எறிந்தனர். கைது செய்யப்பட்ட நடிகை சித்தாலே மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500, 501, 505, வதந்தி, இழிவான கருத்துக்களை தெரிவித்தல், 153ஏ உள்ளிட்ட பரிவிகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.