கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத்தின் 111-வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி அரக்கு காபி குறித்தும், அதன் சிறப்பம்சம் குறித்தும் பேசினார். .
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத்தின் 111-வது எபிசோடில் பிரதமர் மோடி உரையாற்றினார். பொதுவாக தனது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் பொருட்களின் சிறப்பு அல்லது நாட்டின் வளர்ச்சிக்காக சாதனை செய்த நபர்கள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையில், பிரதமர் மோடி ஆந்திராவின் அரக்கு காபியைப் பாராட்டினார், விசாகப்பட்டினம் சென்றிருந்த போது மாநில முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவுடன் பகிர்ந்து கொண்ட தருணத்தை மோடி நினைவு கூர்ந்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி “இந்தியாவில் இருந்து பல தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் தேவை உள்ளது, மேலும் இந்தியாவில் உள்ள ஒரு உள்ளூர் தயாரிப்பு உலகளாவிய ரீதியில் செல்வதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.. அத்தகைய ஒரு தயாரிப்பு அரக்கு காபி.
ஆந்திராவின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அரக்கு காபி அதிக அளவில் விளைகிறது. வளமான சுவை மற்றும் நறுமணத்திற்காக இந்த காபி அறியப்படுகிறது. சுமார் 1.5 இலட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி பயிரிடுவதில் ஈடுபட்டுள்ளன” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ அரக்கு காபியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் கிரிஜான் கூட்டுறவு மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இங்குள்ள விவசாய சகோதர சகோதரிகளை ஒன்றிணைத்து அரக்கு காபி பயிரிட ஊக்கப்படுத்தியது. இதனால் இந்த விவசாயிகளின் வருமானமும் பெருமளவு அதிகரித்துள்ளது,'' என்றும் தெரிவித்தார்..
இந்த மதம் குறித்த சர்ச்சை கருத்தால் ராகுல்காந்திக்கு சிக்கல்.. பல்வேறு மதத்தலைவர்கள் கண்டனம்..
அரக்கு காபி பற்றிய சில தகவல்கள்:
அரக்கு காபிக்கு 2019 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியிலிருந்து தனித்துவமான தன்மையுடன் விளையும் பொருட்களுக்கு இந்த குறியீடு வழங்கப்படுகிறது.
அரக்கு காபி ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், ஒடிசா பகுதியிலும் கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 1100 மீட்டர் உயரத்தில் பயிரிடப்படுகிறது. பழங்குடியினர் ஆர்கானிங் உரங்களைப் பயன்படுத்துதல், பச்சை உரம், மற்றும் ஆர்கானிக் பூச்சி கட்டுப்பாடு போன்ற ஆர்கானிக் முறையில் இந்த காபியை உற்பத்தி செய்கின்றனர்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அரக்கு காபி பற்றிய பிரதமர் மோடியின் கருத்தை பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஜிஐ-குறியிடப்பட்ட அரக்கு காபி பழங்குடியினரை மேம்படுத்துகிறது மற்றும் உலகளவில் இந்தியாவை வலுப்படுத்துகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.