மீண்டும் நீதிபதி மீது செருப்பு வீச்சு! அகமதாபாத் நீதிமன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Published : Oct 15, 2025, 03:13 PM IST
Man Throws Slippers At Ahmedabad Judge

சுருக்கம்

அகமதாபாத் நீதிமன்றத்தில், 1997ஆம் ஆண்டு மோதல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பால் ஆத்திரமடைந்த மனுதாரர், நீதிபதி மீது தனது செருப்பை வீசினார். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நீதிமன்ற விசாரணையின்போது, வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பால் ஆத்திரமடைந்த ஒருவர், நீதிபதி மீது தனது செருப்பை வீசிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1997ஆம் ஆண்டு வழக்கு

இந்த சம்பவம் 1997-ம் ஆண்டு நடந்த ஒரு மோதல் தொடர்பான வழக்காகும். குஜராத் மாநிலம் கோமித்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அன்று காய்கறி வாங்க தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் கடை வீதியில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அடித்த பந்து அவர்மீது பட்டுள்ளது. இதனால், அந்த நபருக்கும் நான்கு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக அந்த நபர் தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பான வழக்கு 2009-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து நான்கு இளைஞர்களையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர் அதே ஆண்டு அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் (Sessions Court) மேல்முறையீடு செய்தார்.

செருப்பு வீச்சு சம்பவம்

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (அக்டோபர் 14, 2025) அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு இளைஞர்களையும் வழக்கில் இருந்து விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மனுதாரரின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மிகவும் ஆத்திரமடைந்த மனுதாரர், விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீசி அவரைத் தாக்க முயன்றார்.

இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. எனினும், நீதிபதி காயமின்றி தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர். நீதித்துறையின் மாண்பு மற்றும் பாதுகாப்புக்கு எதிராக நடந்த இந்தத் தாக்குதலுக்கு நீதித்துறை சேவை சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?