மர்மநபர்கள் தாக்குதல்; மருத்துவமனையில் மம்தா..! மேற்கு வங்கத்தில் பரபரப்பு

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 10:31 PM IST
Highlights

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சில நபர்கள் தள்ளிவிட்டதால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக வரும் 27ம் தேதியும், 2ம் கட்டமாக ஏப்ரல் 1ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று, தான் இதுவரை போட்டியிட்டு வென்றுவந்த தொகுதியை விடுத்து, சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா பானர்ஜி.

இந்நிலையில், இன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அங்கிருந்த துர்கா கோவிலில் வழிபாடு செய்துவிட்டு காருக்கு திரும்பிய மம்தா பானர்ஜியை நான்கைந்து நபர்கள் திடீரென தள்ளிவிட்டுள்ளனர். அதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, இன்று நந்திகிராமில் மம்தா தங்குவதாக இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ”நான் காரில் ஏற சென்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர். எனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதித்தாக்குதல். என்னைச்சுற்றி திடீரென காவலர்கள் யாருமே இல்லை. எனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
 

click me!