
மத்திய அரசு ஊழியர்கள், ரத்த தானம் மற்றும் ரத்தத்தில் அடங்கியுள்ள பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள் உள்ளிட்டவற்றை தானமாக அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிவப்பு அணுக்கள்
தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி, தற்போதைய நிலையில், ஊழியர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இதற்கான ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரத்த தான லாபம்
மத்திய அரசு ஊழியர்கள், வேலைநாளில், அங்கீகரிக்கப்பட்ட ரத்தவங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் தானம் செய்ததற்கான ஆதாரத்தை அளித்தால், அன்றைய நாளை, சிறப்பு சாதாரண விடுமுறையாக கருதி, அவர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.
தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆண்டிற்கு 4 முறை, அவர்கள் இந்த சலுகையை பெற முடியும் என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.