கொரோனா வார்டில் தீவிபத்து… 11 பேர் பலி… மராட்டியத்தில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 3:56 PM IST
Highlights

மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.  

மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.  மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் உள்ளது சிவில் மருத்துவமனை. இந்த மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் என கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தால் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவிய தீயையும் அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனிடையே சம்பவ இடத்தில் உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் என பலர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே கூறுகையில், அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்  10 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் தீ பரவியவுடன், நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புக் குழுக்கள், பல நோயாளிகளை அண்டை வார்டுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்” என்று அகமதுநகர் காவல் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் உறுதியளித்துள்ளார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தீயணைப்புத் தணிக்கைக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த மருத்துவமனையில் தீ தணிக்கை செய்யப்படாவிட்டால், யார் பொறுப்பு? தீ தணிக்கை ஒரு புறம் இருக்க, இது யாருடைய தவறு என்பது பற்றியும் விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிவில் மருத்துவமனையின் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்து அந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவலுக்காக மருத்துவமனைக்கு விரைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் தீவிபத்து ஏற்பட்டதால் அவர்களின் நிலையும் அவர்களை காப்பாற்ற சென்றவர்களின் நிலையும் ஒரு புறம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் மறுபுறம் சுமார் 11 பேர் இந்த தீவிபத்தில் உயிரிழந்த சம்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!