தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடக்கும் இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்ரிக்க அணி 335 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை ஆடியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து களத்தில் இருந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி 85 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மூன்றாம் நாளான இன்று காலை தொடர்ந்து ஆடிய இந்திய அணி கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். பாண்ட்யா 15 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த அஷ்வின் 38 ரன்கள் எடுத்து கோலிக்கு உதவினார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும், நிதானமாக ஆடிய கோலி 153 ரன் எடுத்து அசத்தினார். இந்திய அணி மூன்றாம் நாளில் முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.