ஈவு இரக்கமே இல்லையா... பூனையை கொடூரமாக கொன்று வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

Published : Aug 06, 2025, 02:53 PM ISTUpdated : Aug 06, 2025, 03:07 PM IST
Cat

சுருக்கம்

கேரளாவில் பூனைக்கு உணவு அளித்து கொடூரமாக கொன்ற 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்களின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பூனைக்கு உணவு அளித்து, பின்னர் அதனை கொடூரமாக தாக்கி கொன்றதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், விலங்கு நல ஆர்வலர்களின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் செர்ப்புலசேரியைச் சேர்ந்த ஷாஜீர் (32), பூனைக்கு உணவு அளித்து அதனை கொடூரமாக கொன்று, அதன் உடல் பாகங்களை காண்பிப்பது போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

கோவையில் பதிவுசெய்த வீடியோ

புகாரை அடுத்து ஷாஜீரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பூனையைக் கொன்ற வீடியோ கோவையில் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஷாஜீரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷாஜீர் மீது, இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 325-ன் கீழ் விலங்குகளை காயப்படுத்துதல், கொல்லுதல் அல்லது செயலிழக்கச் செய்தல் ஆகிய குற்றங்களுக்காகவும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்பிரிவு 11(1)-ன் கீழ் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்துக்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாஜீரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, "மனித இறைச்சியை விட பூனை இறைச்சி சுவையாக இருக்கும்" என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த செயல் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

விலங்குகளைத் துன்புறுத்தினால் என்ன தண்டனை?

இந்தியாவில் விலங்கு வதைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960, விலங்குகளை பாதுகாப்பதற்கான முதன்மைச் சட்டமாக உள்ளது. உடல் ரீதியான வன்முறை முதல் புறக்கணிப்பு வரை, கொடுமையை உருவாக்கும் செயல்களை இந்த சட்டம் வரையறுக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பிரிவு 325 போன்ற விதிகள் விலங்குகளை சிதைத்தல் அல்லது கொல்வதை குற்றமாக்குகிறது. இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பது மிக குறைவாகவே உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகள் மீதான கொடுமைகளை தடுக்க, கடுமையான சட்ட அமலாக்கம், விரைவான விசாரணை மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!