உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்காத கேரளம்…. முல்லைப் பெரியாறு அணையில் உபரிநீர் திறப்பு..!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 8:28 AM IST
Highlights

முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருப்பதாக கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய நிலையில், அணை மிகவும் பலவீனமாக இருப்பதாக அம்மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருப்பதாக கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய நிலையில், அணை மிகவும் பலவீனமாக இருப்பதாக அம்மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு – கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. 155 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 15.5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும். தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன. முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கி வைப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்கள் மூலம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கிவைக்க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. ஆனால் ஒருமுறையேனும் அதனை நிகழவிடாமல் கேரளா தடுத்து வருகிறது. மழைக்காலம் வரும்போதெல்லாம் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அது உடைந்து 35 லட்சம் மக்கள் பலியாக போவதாகவும் கேரளாவில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்பதே கேரள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. அப்படி செய்தால் அணை பாதுகாப்பு, பராமரிப்பு முழுவதும் கேரளத்திடமே சென்றுவிடும். இதனால் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் பாசன வசதி பெறமுடியாமல் பாலைவனமாக மாறிவிடும். இதற்காக கேரளாவில் முடிவை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் களப் போராட்டத்தையும், தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், தற்போது கேரளாவில் மழை பெய்துவருவதால் முல்லைப் பெரியாறு அணையில் 139 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கிவைக்க கூடாது என்று கேரளத்த்தை சேர்ந்த தனிநபர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் கண்காணிப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனிடையே அணை பலவீனமாக இருப்பதாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் விசம செய்திகளை பரப்பினர். இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது, பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள சிறு வேளைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று உறுதியளித்தது.

முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 137 அடி உயரம் தான் தண்ணீர் இருப்பு உள்ளது. ஆகவே கேராளா தொடர்ந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவால் கேரளத்திற்கு பின்னடைவு ஏற்படவே, சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், அணை பாதுகாப்பாகவே உள்ளது. தேவையற்ற வதந்திகளை பரப்பினான் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய பினராயி, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை எடுத்துக்கொள்ளுமாறு நிலைப்பாட்டை மாற்றினார். அடுத்த நாளே நிலைப்பாட்டில் முற்றிலும் மாறுபட்டு, முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில்மனு தாக்கல் செய்தது. மேலும், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கபப்ட்டது. கேரள அரசின் மாறுபட்ட நிலைப்பாடுகள் தமிழ்நாடு விவசாயிகளை கொந்தளிக்கச் செய்தது.

இந்தநிலையில், முல்லைப் பெரியாறு அணையில் 137.5 அடியாக நீர்மட்டம் இருந்தபோதே, உச்சநீதியமன்ற உத்தரவையும் மதிக்காமல், உபரிநீரை திறப்போம் என்று அம்மாநில மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் ஆகியோர் அதிரடியாக அறிவித்தனர். இந்தநிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 534 கனஅடி நீர், வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு வெளியேற்றப்படுகிறது. 13 மதகுகள் 3 மற்றும் 4வது மதகுகள் 35 செ.மீ. உயர்த்தப்பட்டு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் கேரள அரசு செயல்படுவது தமிழ்நாட்டு மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

click me!