
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 4 போலீசார் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 பேர் பலி
இதன் ஒரு பகுதியாக , அம்மாநிலத்தில் சோப்பூரில் உள்ள சோட்டா மார்க்கெட்டில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த தாக்குதலில் 4 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த 4 பேரில் ஒருவர் காவல்துறை உதவி ஆய்வாளர் இர்ஷாத் என்பது தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்பில் பலியான காவலர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த முகமது அமீன் மற்றும் சோப்பூரைச் சேர்ந்த குலாம் நபி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
சோட்டா மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச்செய்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.