கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?

By Dhanalakshmi GFirst Published May 13, 2023, 11:05 AM IST
Highlights

இந்தியாவில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், முடிவுகளை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் இருக்கும். தேர்தலும் திருவிழாவைப் போன்று நடக்கும்.
 

அப்படி சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலின் இறுதி முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்து முடிசூடப் போகும் முதல்வர் யார்? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதுதான்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருந்தாலும், முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்துக் கொண்டு இருக்கிறது. ஜேடிஎஸ் என்றால் குமாரசாமி என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விஷயம். ஆனால், காங்கிரஸ், பாஜகவில் யார் என்ற கேள்வி நீடித்தது. காங்கிரஸ் கட்சி இன்னும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. சித்தராமையாவாக இருக்கலாம் அல்லது டிகே சிவகுமராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வராவதற்கு சித்தராமையா முயற்சித்து வருகிறார். 

கர்நாடகாவில் வெற்றி பெற்றதா ஜெய் பஜ்ரங் தளம்? பாஜகவை மடக்குவதற்கு ஆம் ஆத்மி வழியில் சென்ற காங்கிரஸ்!!

ஆனால், மறுபக்கம் இதுதான் சரியான தருணம், முதல்வராக வேண்டும் என்று டிகே சிவகுமாரும் முயற்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுனே கார்கேவும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். காங்கிரசின் வெற்றி இவரது தலைமைக்கும் புகழ் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மண்ணின் மைந்த என்று கர்நாடகா தேர்தல் பரப்புரையில் எந்த இடத்திலும் சொல்ல மறக்கவில்லை. அழுத்தம் திருத்தமாக பேசினார். இது இவருக்கு கை கொடுத்தது.

சித்தராமையா:

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் முதல்வர் பட்டியலில் முதல் ஆளாக இருக்கிறார். காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில் இவருக்குத்தான் அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. மைசூர் மாவட்டத்தில் சித்தராமணஹண்டி பகுதியைச் சேர்ந்தவர். 2013-2018 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எந்த இடையூறும் இல்லாமல் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடித்தது. காங்கிரஸ் 122 இருந்து வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.  

மற்றொரு பக்கம் இவரது வயது மைன்ஸ் பாயின்ட் ஆக இருக்கிறது. தற்போது இவருக்கு வயது 76. கடந்த கால ஆட்சியில் இவரது பிளஸ், மைனஸ்களை மக்கள் நன்கு அறிந்து இருக்கின்றனர். கடந்த ஆட்சியில் குருபா சமூகத்தினருக்கு அதிகளவில் சலுகைகளை வழங்கி இருந்தார். லிங்காயத் மற்றும் ஒல்லிக்கர் சமூகத்தினருக்கு பெரியளவில் இவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், ஊழல் புகாரும் பெரிய அளவில் பேசப்பட்டன. லிங்காயத் சமூகத்தில் இரண்டு பிரிவினரை உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதாவது இந்த சமுதாயத்தில் லிங்காயத், வீரசைவர்கள் என்ற இரண்டு பிரிவினரை உருவாக்க முயற்சித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து இருந்தது. 

இது என்ன பாஜகவுக்கு வந்த சோதனை.. கர்நாடக அமைச்சர்கள் 8 பேர் பின்னடைவு..

டிகே சிவகுமார்:
முதலமைச்சராகும் தனது லட்சியத்தை நிறைவேற்ற இதுவே சிறந்த வாய்ப்பு என நம்புகிறார் மூத்த அரசியல்வாதியான டிகே சிவகுமார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் பல கோவில்களுக்குச் சென்று யாகங்கள் வளர்த்தார். கனகபுராவில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது தொகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். கர்நாடகாவிலும் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாகவும், நெருக்கடி காலங்களில் தூணாகவும் இருந்து வருகிறார். நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பதுடன், மற்ற மாநில தேர்தல்களுக்கும், வரும் மக்களவைத் தேர்தலுக்கும் நிதி திரட்ட சிவகுமார் சரியான ஆள் என்று தலைமை இன்றும் இவரது மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது. 

இவர் சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த பல வழக்குகளை எதிர்கொள்கிறார். இந்த வழக்குகள் தொடர்பாக 104 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இவரது அரசியல் அனுபவம் என்பது சித்தராமையாவிடம் இருந்து வேறுபடுகிறது. எம்எல்ஏக்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் சித்தராமையா. அந்தளவிற்கு அனுபவம் இல்லாதவர் டிகே சிவகுமார் என்ற கருத்தும் உள்ளது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்துதான் முதல்வரை காங்கிரஸ் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

click me!