‘நடிகர் கமல் ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள்’... இந்து மகா சபா தலைவர் கொலைவெறி பேச்சு!

First Published Nov 4, 2017, 5:41 PM IST
Highlights
Kamal Haasan should be shot dead for his Hindu terror remark says Hindu Mahasabha


இந்துக்களுக்கு எதிராகப் பேசும் நடிகர் கமல் ஹாசன் , அவரைப் போன்ற மனிதர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது சுட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்து மகா சபா தலைவர் பண்டிட் அசோக் சர்மா கொலை வெறியுடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்து தீவிரவாதம்

நடிகர் கமல் ஹாசன் ‘ஆனந்த விகடன்’ வாரபத்திரிகையில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில் இந்த வாரத்தில் குறிப்பிட்டுள்ளதில், “ இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது. முன்பு எல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.

ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி, இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.  எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று அவர் எழுதியிருந்தார்.

வழக்கு

இதற்கு பா.ஜனதா கட்சித் தலைவர்கள் பலர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி நகரில் கமல் ஹாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்துக்களுக்கு எதிராகப் பேசும் நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொன்று பாடம் கற்பிக்க வேண்டும் என இந்து மகாசபா தலைவர் கொலைவெறியுடன் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

சுட்டுக்கொல்லுங்கள்

இது குறித்து அகில பாரதிய இந்து மகா சபாவின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா விடுத்த மிரட்டலில் கூறியிருப்பதாவது-

இந்து மதத்துக்கு எதிராகப் பேசும் நடிகர் கமல் ஹாசன், அவர்களைப் போன்றவர்கள் தூக்கிலிடப்பட்டோ அல்லது சுட்டுக்கொல்லப் பட வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

வாழ உரிமையில்லை

இந்து மதத்தைச் சார்ந்த மக்களின் நம்பிக்கைகள் குறித்து தவறாகப் பேசும் எந்த நபருக்கும் இந்த புனித பூமியில் வாழ உரிமை இல்லை.  அவர்களின் பேச்சுக்கு சாவு தான் பதிலாகக் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கமல் படத்தை பார்க்காதீர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகர அகில பாரதிய இந்து மகா சபா தலைவர் அபிஷேக் அகர்வால் கூறுகையில், “ நடிகர் கமல் ஹாசன், அவர்களின் குடும்பத்தினர் நடித்த திரைப்படத்தை பார்க்காமல் நமது கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இதில் உறுதி ஏற்று பின்பற்ற வேண்டும். இந்துக்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்துபவர்களை மன்னிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

click me!