
கொடைக்கானலில், மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என தேமுதிக பிரமுகர் மகேந்திரன் வியாழக்கிழமை சார்- பதிவாளரிடம் மனு அளித்துள்ளார். இரோம் சர்மிளா கொடைக்கானலை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் சர்மிளா, அங்குள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை, கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கி, கடந்த 2016 ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடத்தினார்.
பின்னர், தனது போராட்டத்தை முடித்து கொண்ட இரோம் சர்மிளா, அரசியல் கட்சியை துவங்கினார். அதைதொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதையொட்டி, மாநிலம் முழுவதும் மக்களை உற்சாகமாக சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.
இந்த தேர்தலில் இரோம் சர்மிளா வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவில், மிகவும் குறைந்த வாக்குகளே பெற்றதால், அவர் தோல்வியை தழுவினார். இதையடுத்து, பொது வாழ்வில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வரும் இரோம் சர்மிளாவுக்கு தற்பாது 45 வயதாகிறது.
தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள இரோம் சர்மிளா, தனது காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டிக்னிகோ (55) என்பவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.அப்போது, சார் பதிவாளர் ராஜேஷ், இந்திய தனி திருமண சட்டத்தின்படி 30 நாட்களுக்குள் இந்த திருமணத்துக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொடைக்கானல், பேத்துப்பாறையைச் சேர்ந்த தேமுதிக பிரமுகரும், சமூக ஆர்வலருமான மகேந்திரன் என்பவர், இந்த திருமணத்தை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து சார் பதிவாளரிடம் நேற்று மனு அளித்தார்.
பின்னர் மகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:
கொடைக்கானல் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார். கொடைக்கானல் அமைதியான இடம். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி.
இந்த மக்களைத் போராட தூண்டி விட்டு, போராட்டக்களமாக மாறுவதை சமூக ஆர்வலர்கள் விரும்பவில்லை. இவரைப்போன்ற போராளிகளால், கொடைக்கானலில் அமைதி நிலைக்காது. எனவே, இரோம் சர்மிளா திருமணத்தை பதிவு செய்வதை நிராகரித்து, அவரை கொடைக்கானலைவிட்டு வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.