இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஜப்பான் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
ரூ.1.10 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு 88 ஆயிரம் கோடி ரூபாயை வெறும் 0.1% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. மேலும் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு இந்தியாவிற்கு 50 ஆண்டுகள் கால அவகாசமும் 15 ஆண்டுகள் கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொருளாதார உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் ஜப்பான் வழங்குகிறது. நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே அமைக்கப்படுகிறது. 24 புல்லட் ரயில்கள் ஜப்பானிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயில்கள்தான் இந்தியாவிலும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பானவை. தொழில்நுட்பத்தில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த புல்லட் ரயில்கள் 1964-ம் ஆண்டு முதல் ஜப்பானில் இயக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயில்களால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இப்படியாக பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய வகைகளில் இந்தியாவிற்கு ஜப்பான் சிறப்பான உதவிகளை செய்து வருகிறது. உலக அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனா, இந்தியாவுடன் சில விஷயங்களில் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் உதவுவது சீனாவை வருத்தப்பட வைத்துள்ளது.