
ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் கீழே விழுந்தவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது. பொது மக்கள் அநா காவலருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புரானாபால் தர்வாசா என்ற முக்கிய சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென நெஞ்சு வலியால் துடித்த அவர், சாலையில் சுருண்டு விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போக்குவரத்து காவலர் சந்தன், மற்றோரு காவலர் இனயதுல்லா என்பவரது உதவியுடன், நெஞ்சுவலியால் துடித்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
நெஞ்சு வலி வந்தவரின் மார்பில் மசாஜ் செய்த போக்குவரத்து காவலர்,அவருக்கு ஆறுதல் கூறி அவரது பயத்தைப் போக்கினார்.
இதையடுத்து போக்குவரத்து காவலரின் முதலுதவிச் சிகிச்சையால் சாலையில் மயங்கி விழுந்த நபர் உயிர் பிழைத்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்த ஐதராபாத் டிராபிக் கமிஷனர் ரங்கநாத், உரிய நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்
போக்குவரத்து காவலர்களின் இந்த மனிதாபிமான செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக வீடியோ காட்சி வெகு வேகமாக பரவி வருகிறது.