
உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா சராசரி பாதிப்புக்கு கீழ் உள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளாவில் புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தக்காளி வைரஸ் எனப்படும் அந்த வைரஸால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பது முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படும். கொல்லம் மாவட்டத்தில் இந்த வைரஸின் பரவல் அதிகம் உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் அம்மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காய்ச்சல் தமிழகத்துக்கு பரவும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், கேரளாவில் எல்லைப் பகுதி தமிழகத்துடன் தான் அதிகம் உள்ளது.
இதனையொட்டி தமிழக - கேரளா எல்லையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநில எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளிலும் இந்த கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
வாளையாறு வழியாக கோவை வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ப்படுகிறது. இதன் பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தக்காளி நிறத்தில் பாதிப்பு ஏற்படும் இந்த வைரசுக்கும் தக்காளிக்கும் தொடர்பில்லை என்பது குறிபிடத்தக்கது.