விவசாயிகள் போராட்டத்தில் விபரீதம்….மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பலி…காங்கிரஸ் முழு அடைப்பு…
மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பழம், காய்கறி , பால் ஆகியவற்றை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு பிரிவினருக்கு உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை விலக்கிக்கொண்ட நிலையில், மற்றொரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் Mandsaur பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த மத்தியப்பிரதேச முதலமைச்சர் Shivraj Singh Chouhan உத்தரவிட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ருபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ருபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் Shivraj Singh Chouhan அறிவித்துள்ளார்.
இதனிடையே விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.