டெல்லியில் இருந்து அவசர அழைப்பு.. பட்டமளிப்பு விழாவை ரத்து செய்து பறந்த ஆளுநர்..!

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 8:10 PM IST
Highlights

டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பட்டமளிப்பு விழா பயணத்தை ரத்து செய்துவிட்டு, திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
 

சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் 20 வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக அளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கி, விழா தலைமையுரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதனையொட்டி, தமிழக ஆளுநர் இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் அவரது இந்த திட்டம் மாறியுள்ளது. டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

சனிகிழமையன்று நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மீதும் அவர்களது முகாம்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் அவரச அலோசனை மேற்கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நாகாலாந்து  மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்தில் பணி முடிந்து வீடு திரும்பிய சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் என்று நினைத்து நடத்திய, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், பணி முடிந்து  நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மோன் மாவட்டத்தில் நாகாலாந்தின் பிரிவினைவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவர் மீது தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினர் தாயார் நிலையில் இருந்தனர். அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டதும், பயங்கரவாதிகள் வருவதாக எண்ணி அதிரடியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில், பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டினால் பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தில், மாநிலத்தின் உயர் மட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!