பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொலை ..நாகாலாந்தில் பரபரப்பு..!

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 5:20 PM IST
Highlights

நாகாலாந்தில் பணி முடிந்து வீடு திரும்பிய சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் என்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
 

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோன் மாவட்டத்தில் நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அப்பகுதியில் தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. 

அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டதும், அதிரடியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ தவறுதலாக சுடப்பட்டது தொடர்பாக உயர் மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அமைதி காக்குமாறு நாகலாந்து முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்கள் தாக்குதலில் இராணு வீரர் ஒரு உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடம் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மோன் மாவட்டத்தில், மியான்மருடன் எல்லைப் பகுதி ஆகும். இங்கு ஒரு நுண்துளை சர்வதேச எல்லையை மோன் மாவட்டம் பகிர்ந்து கொள்கிறது. இங்குதான் மியான்மருடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவின் பிரிவினைவாத இயக்கமான தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் கிளை பிரிவான யுங் ஆங் பிரிவு மறைவாக செயல்பட்டு வருகிறது.

இதனிடையே நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, எதிர்பாராத இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க உறுதி செய்யப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  இதுக்குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். தங்கள் சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்ன சரியாக செயல்படுகிறது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

click me!