
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர், தனக்குள் எழுந்த ஆண் உணர்வால், திருநம்பியாக மாறியவர். இதேபோல், கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருபவர் சூர்யா வினோத். தனக்குள் எழுந்த பெண் உணர்வால் சூர்யா வினோத் திருநங்கையாக மாறியவர். ஆணாக மாறிய இஷானும், பெண்ணாக மாறிய சூர்யா வினோத்தும் காதலித்து வந்தனர். ஜாதி மதங்களைக் கடந்து, சமூகக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து இவர்களது திருமணம் நடந்துள்ளது.
கேரளாவில் நடந்த முதல் மாற்று பாலின தம்பதியர் இவர்களாகும். சூர்யா வினோத், திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று நம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.
Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை மாற்றுப் பாலினத்தவரான இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் சட்டப்படி நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை - திருநம்பி திருமணம் என்றும் பெயரினையும் பெற்றுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் கேரளாவில் மறுக்கப்படாத நிலையிலும், அவர்கள் துயரத்தை அனுபவித்துதான் வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்கள், தங்களுடைய திருமணத்தை சட்டரீதியாக நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். அதன்படி சிறப்பு திருமணம் பிரிவு சட்டத்தின்கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தங்களது திருமணம் குறித்து இஷானும், சூர்யாவும் பேசும்போது, எங்கள் திருமணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும்தான், எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களைப் புரிந்து கொண்டதால் திருமணத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கூறினர்.