
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2வது அலையின் தொற்று சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே சமயத்தில் 3வது அலையில் இருந்து மக்களை காப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனை திறனை அதிகரிக்க அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் டாடா குழுமத்தின் புதிய மருத்துவ சிகிச்சை அமைப்பான டாடா எம்டி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.
எதிர்காலத்தில் கொரோனா பரிசோதனைகளின் தேவை அதிகரித்தால், அதை சமாளிக்க இந்த இரு அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளன. இதன்படி நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் பரிசோதனை கூடங்கள் பயன்படுத்தப்பட்டு, நாட்டின் சிறு நகரங்களில் கூட கோவிட் பரிசோதனை திறன் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிஎஸ்ஐஆர் மற்றும் டாடா எம்டி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்ள உள்ளன. டாடா எம்டி நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் மூலம் ஆர்டி-பிசிஆர், சிஆர்ஐஎஸ்பிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவிர 3 அறைகளை கொண்ட பரிசோதனை வாகனத்தையும் டாடா எம்டி வடிவமைத்துள்ளது. இதை பாதிப்பு அதிகமுள்ள பகுதிக்கே கொண்டு சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடியும். இதன் மூலம் நாட்டின் கோவிட் பரிசோதனை மிகவும் விரைவாக செய்து முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி பாண்டே கூறியதாவது: ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தடுப்பூசியை தவிர, துரித பரிசோதனை, கொரோனா பாதிப்பு நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகியவை சிறந்த உத்தியாக உருவெடுத்துள்ளன. டாடா எம்டி-யுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் பரிசோதனை கூடங்களில் ஆர்டி-பிசிஆர் மற்றும் சிஆர்ஐஎஸ்பிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது நாட்டின் கொவிட் பரிசோதனை திறனை அதிகரிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.