மனைவியின் கொடுமை, திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவது ஆகிய காரணங்கள் மனைவி ஜீவனாம்சம் பெறுவதை தடுக்காது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனைவியை விட்டு பிரிந்த கணவர், அவருக்கு மாதம் மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை மனைவி கொடுமை செய்ததாகவும், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தன்னை கைவிட்டுச் சென்றதால் பராமரிப்புச் செலவை என்னால் வழங்க முடியாது என்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங் அவரது மேல்முறையீட்டை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது, “மனைவி கொடுமை காரணமாக கணவருக்கு விவாகரத்து வழங்கப்படும் வழக்குகளில் கூட, நீதிமன்றங்கள் மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்குகின்றன. மனைவி ஜீவனாம்சம் கோருவதற்கு கொடுமைப்படுத்தினார் என்ற காரணம் தடையில்லை. அவை ஜீவனாம்சத்தை பறிக்காது. இதற்கு பல்வேறு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் முன்னுதாரணங்கள் உண்டு.
பராமரிப்புச் சட்டம் என்பது ஒரு ஆணின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மனைவி கொடுமை மற்றும் துன்புறுத்தல் போன்ற காரணங்களை கூறி பராமரிப்புச் செலவை வழங்காமல் இருக்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த மேல் முறையீட்டு மனு சட்டத்தினை தவறாக பயன்படுத்தவும், கணவன் மீது சுமத்தப்படும் பொறுப்பிலிருந்து தப்பிக்க ஆதாரமற்ற சர்ச்சைகளை உருவாக்குவதுமாக உள்ளதாகவும் நீதிபதி கூறினார். மனைவி பிரிந்துச் சென்ற பின் வேறொருவருடன் தொடர்ந்து உறவில் இருந்தார் என்பதை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். பிரிந்த பின் ஒருமுறை அல்லது எப்போதாவது ஒருவருடன் உறவில் இருப்பதனை காரணம் காட்டி ஜீவனாம்சத்தை நிறுத்த முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.