கிரிக்கெட் வீரர் அஜிங்கிய ரஹானேவின் தந்தை ஓட்டிவந்த கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காகல் தாலுக்கில் இந்த விபத்து நடந்துள்ளது.
ரஹானே குடும்பத்தினர் கடற்கரை கிராமமான தர்கர்லிக்கு கோல்ஹாபூர் வழியாக காரில் சென்றுள்ளனர். காரை அஜிங்கிய ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே ஓட்டி சென்றுள்ளார். காரை அவர் வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதியதில் ஆஷா காம்ப்லே என்ற 67 வயது மூதாட்டி உயிரிழந்தார். வேகமாக ஓட்டி வந்ததால் காரை உடனடியாக திருப்ப முடியாமல் மூதாட்டி மீது மோதி விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த மாத்திரத்தில், அப்பகுதியில் இருந்தவர்கள் மூதாட்டியை மருத்துவமனைக்கு தூக்கிசென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அலட்சியத்தினால் மரணம் ஏற்பட்டது தொடர்பான சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காகல் போலீசார், ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை கைது செய்தனர்.