கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இருப்பினும் சிறிய கட்சிகள் உதவியோடு கோவாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க மனோகர் பாரிக்கர் உரிமை கோரினார். பின்னர், ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, கோவாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு கோவா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. பா.ஜ.க-வின் 13 எம்எல்ஏ-க்கள், மஹாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏ-க்கள், கோவா மக்கள் முன்னணியின் 3 எம்.எல்.ஏ-க்கள், 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உட்பட 22 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
16 எம்.எல்.ஏக்கள் மனோகர் பாரிக்கருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒரு எம்.எல்.ஏ வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன் மூலம் கோவாவில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.