வீட்டுக்கே வரும் வகுப்பறை; டிஜிட்டல் முறையில் ஆம்னி பேருந்தில் பாடசாலை

By Pothy RajFirst Published Apr 15, 2022, 11:33 AM IST
Highlights

போக்குவரத்து வசதியில்லாத, தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்காக வீட்டுக்கே சென்று பாடங்களைக் கற்பிக்கும் மொபைல் கிளாஸ்ரூம்களை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்துள்ளது.

போக்குவரத்து வசதியில்லாத, தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்காக வீட்டுக்கே சென்று பாடங்களைக் கற்பிக்கும் மொபைல் கிளாஸ்ரூம்களை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்துள்ளது.

கிளாஸ்ரூம் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் சொகுசுபேருந்து வடிவத்தில் நகரும் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கும் வகையில் இந்த பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் பற்றாக்குறை

கிராமங்களிலும், போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும், பாடங்களைக் கற்க முடியவில்லை. இந்தக் குறைபாடுகளைத் தீர்க்கவே க்ளாஸ்ரூம் ஆன் வீல்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் படி பேருந்து வகுப்பறை போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் டிஜிட்டல் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் இணைய வசதி

ஷிக்சா ரத் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தில் டிஜிட்டல் ஆடியோ, கணினி, தொடுதிரை, அதிவிரைவு இணைய வசதி போன்றவசதிகள் உள்ளன. இந்த பேருந்து ஜெய்சல்மார் மாவட்டம், ராம்தேவ்ரா கிராமத்துக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் டிஜிட்டல் வகுப்பறையில் அமர்ந்து கணினி உதவியுடனும், அதிவேக இணைய வசதியுடனும் பாடங்களைக் கற்பார்கள். 

சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், 10 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்வகையில் தேவையான வசதிகள், வகுப்புகளும் இந்த நகரும் வகுப்பறையில் எடுக்கப்படும். முதல் கட்டமாக ஜெய்சல்மார், பார்மர் மாவட்டங்களில் உள்ள சிறிய கிராமங்களுக்கு இந்த பேருந்து இயக்கப்படுகிறது.

டிஜிட்டல் வகுப்புகள்

உத்கர்காஷ் கிளாசஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி நிர்மல் கெலாட் கூறுகையில் “ பேருந்து உள்ள இணைய வசதி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடி வகுப்புகளை ஆசிரியர்கள் எடுப்பார்கள். தங்களுக்கான ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை கேட்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்

டிஜிட்டல் ஸ்டூடியோ எவ்வாறு இயங்குகிறது, அதன் அனுபவம் ஆகியவற்றை பெற்றோரும் உணர முடியும், குழந்தைகளும் சிறப்பாகக் கல்வி கற்க முடியும். குழந்தைகளுக்குள் மறைந்துகிடக்கும் திறனை வெளிக்கொண்டுவர இந்த திட்டம் உதவும். பாடங்களை டிஜிட்டல் முறையில் குழந்தைகள் கற்கும்போது எளிதாகப் புரியும். எங்கள் அமைப்பு அடுத்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் குழந்தைகளைச் சென்றடையும்”எனத் தெரிவித்தார்

click me!