அதிக பணிச்சுமையால் EY நிறுவன ஊழியர் மரணம்; விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி!

By Ramya sFirst Published Sep 19, 2024, 1:29 PM IST
Highlights

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் அதிக வேலைப்பளு காரணமாக உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா ( Ernst & Young India) நிறுவனத்தில் பணிபுரிந்த 26 வயதான பட்டயக் கணக்காளர் ஒருவர் அதிக வேலை அழுத்தம் காரணமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புனேவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்ற பெண் எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தில் பட்டய கணக்காளராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்னா செபாஸ்டியன் ஜூலை 20ஆம் தேதி உயிரிழந்தார். அதீத சோர்வாக இருப்பதாக கூறிய அன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தின் இந்தியத் தலைவருக்கு அவரது தாயார் அனிதா அகஸ்டின் எழுதிய கடிதம் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

Latest Videos

அன்னா செபாஸ்டியனை இழந்து தவிக்கும் தாயாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நாங்கள் படும் வேதனையை வேறு எந்தக் குடும்பமும் தாங்காது. பள்ளி மற்றும் கல்லூரியில் முதலிடம் பெற்று, கடினமான பட்டயக் கணக்கியல் தேர்வில் தனிச்சிறப்புடன் தேர்ச்சி பெற்ற அண்ணா ஒரு சிறந்த மாணவியாக இருந்தாள். "EY தான் அவளது முதல் வேலை, அப்படிப்பட்ட ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தில் சேர்ந்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 20, 2024 அன்று, அன்னா இறந்துவிட்டாள் என்ற பேரழிவுச் செய்தியைப் பெற்றபோது என் உலகம் சரிந்தது. அவளுக்கு வெறும் 26 வயது தான்." வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகள் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரித்தார். அதாவது “ ஜூலை 6, சனிக்கிழமை அன்று, அன்னாவின் CA பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நானும் என் கணவரும் புனே சென்றடைந்தோம். கடந்த ஒரு வாரமாக இரவு தாமதமாக 1 மணியளவில் அவள் பிஜிக்கு வந்துள்ளார். நெஞ்சு அடைப்பதாக புகார் அளித்ததால், நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். புனேவில் அவளது ECG சாதாரணமாக இருந்தது, அவளுக்கு போதுமான தூக்கம் வரவில்லை, மிகவும் தாமதமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள் என்று கூறிய மருத்துவர் சில மருந்துகளை எழுதி கொடுத்தார்.

மருத்துவரை பார்த்த உடனே தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், அன்று இரவு தனக்கு லீவு கிடைக்காது என்றும் கூறி பணிக்கு திரும்பினாள். ஜூலை 7 தான் பட்டமளிப்பு நாள், ஆனால் அவள் அன்றும் மதியம் வரை வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தாள், நாங்கள் தாமதமாக பட்டமளிப்பு இடத்தை அடைந்தோம்.

உழைத்து சம்பாதித்த பணத்தில் தன் பெற்றோரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது என் மகளின் பெரிய கனவாக இருந்தது. விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து எங்களை அழைத்துச் சென்றாள். நாங்கள் கடைசியாக வந்த அந்த இரண்டு நாட்களிலும் கூட எங்கள் குழந்தையுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை., வேலை அழுத்தம் காரணமாக அவளால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை." என்று அன்னாவின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரின் கடிதத்தில் “ அன்னா செபாஸ்டியன் இரவு வெகுநேரம் வரை, வார இறுதி நாட்களில் கூட அதிக நேரம் வேலை செய்தார். மூச்சு விட கூட நேரமில்லாமல் வேலை செய்தார். அவளுக்கு ஓய்வெடுக்கவோ அல்லது குணமடையவோ சிறிது நேரமே இல்லை. அவள் முடியாது என்று கூறிய போது உங்களால் முடியும்" இரவில் வேலை, அதைத்தான் நாம் அனைவரும் செய்கிறோம் என்று அவள் நிறுவனத்தில் கூறியுள்ளனர்.

அன்னா மிகவும் சோர்வுடன் தன் அறைக்குத் திரும்புவாள், சில சமயங்களில் உடைகளைக்கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்துவிடுவாள். தனது பணிகளை தனக்கு கொடுக்கப்பட்ட அவகாசத்தில் முடிக்க போராடினாள். ஆனால் அன்னாவின் இறுதிச்சடங்கில் EY நிறுவனத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில், தனது கடைசி மூச்சு வரை உங்கள் நிறுவனத்திற்கு அனைத்தையும் கொடுத்த ஒரு ஊழியருக்கு இதுதான் நிலை. தனது மகளின் அனுபவம் "உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

இதனிடையே எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனம் அன்னாவின் மரணத்தால் மிகவும் வருத்தமடைவதாகவும், குடும்பத்தின் கடிதப் பரிமாற்றத்தை மிகவும் தீவிரமாகவும், பணிவுடன் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் “ இது மிகவும் வருத்தமாக இருந்தாலும் பல நிலைகளில் கவலையளிக்கிறது. பாதுகாப்பற்ற மற்றும் சுரண்டல் நிறைந்த பணிச்சூழலின் அன்னாவின் தாய் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த பதிவுக்கு பதிலளித்த தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே “ பாதுகாப்பற்ற மற்றும் சுரண்டல் நிறைந்த பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா செபாஸ்டியன் பேராயிலின் துயர இழப்பால் ஆழ்ந்த வருத்தம். நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், தொழிலாளர் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக புகாரை எடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Deeply saddened by the tragic loss of Anna Sebastian Perayil. A thorough investigation into the allegations of an unsafe and exploitative work environment is underway. We are committed to ensuring justice & has officially taken up the complaint. https://t.co/1apsOm594d

— Shobha Karandlaje (@ShobhaBJP)

 

click me!