வட மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் அக்னி வீரர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாளாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. தெலுங்கானாவில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுபடுத்த போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பீகார், ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் , மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மேலும் படிக்க: அக்னிபாத்துக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள்... டெல்லியில் அவசரமாக மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்!!
இந்நிலையில் தமிழகத்திலும் இந்த போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே இந்த திட்டத்தில் சேருவதற்கான இளைஞர்களின் உச்சவரம்பை 21 யிலிருந்து 23 ஆக உயர்த்தியது மத்திய அரசு. மேலும் இந்த திட்டம் இளைஞர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பின்வாங்கவில்லை.
இந்நிலையில் மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கவும் மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முதல் பிரிவு அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஏற்கனவே அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை பிரதமர் மோடி 21 யிலிருந்து 23 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திரண்ட இளைஞர்கள்.. சென்னையிலும் வெடித்த போராட்டம்..