
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தோடு, வாக்குச் சீட்டு தணிக்கை எந்திரமும் பயன்படுத்துவதற்காக ரூ. 3 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒதுக்கீடு செய்தது.
வாக்குச் சீட்டுதணிக்கை எந்திரம் வாங்க மிகவிரைவாக நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள், காலம் தாழ்த்தாதீர்கள் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அவசரக்கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதி இருந்தது. இதையடுத்து மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் ஆட்சிக்கு வந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்வைத்தார். மேலும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது, 16 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம்ஜைதியிடம் கடந்த வாரம் மனு அளித்தனர். மேலும், உச்ச நீதிமன்றமும் இந்த காகித தணிக்கை எந்திரத்தை விரைவாக வாங்குங்கள் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது.
வாக்குசீட்டு தணிக்கை எந்திரம் தேர்தலில் நடைமுறைப்படுத்தும் போது, வாக்குப் பதிவின் போது, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். வாக்களித்தபின்வாக்காளர் தனது விருப்பத்துக்கு ஏற்ப சரியான யாருக்கு வாக்களித்தோமோ என்ற விவரமும், கட்சியின் சின்னமும் இருக்கும். அந்த சீட்டை படித்தபின், அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட வேண்டும். இதில் மோசடி செய்ய முடியாது.
ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்குப்பதிவையும், இந்த வாக்குச்சீட்டையும் எண்ணிப்பார்த்து சரிபார்க்க முடியும். ஆதலால், இந்த வாக்குச்சீட்டு தணிக்கை எந்திரத்தை நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பயன்படுத்தும் வகையில் 16 லட்சம் வாக்குச்சீட்டு தணிக்கை எந்திரம் வாங்க ரூ. 3 ஆயிரத்து 174 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு அவசரக் கடிதம் எழுதியது
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடியது. அந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 16 லட்சத்து 15 ஆயிரம் வாக்குச்சீட்டு தணிக்கை எந்திரத்தை வாங்க ரூ. 3 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை இருபிரிவுகளாக ஒதுக்கியுள்ளது. முதல்பிரிவாக ரூ. ஆயிரத்து 9 கோடியும், 2-வதுபிரிவாக ரூ.9 ஆயிரத்து 200 கோடி புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாங்க ஒதுக்கியது.
இந்த வாக்குச்சீட்டு தணிக்கை எந்திரங்களை பெல் நிறுவனம், இ.சி.ஐ.எல். ஆகிய இரு அரசு நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன. இந்த முழுமையாக தயாரித்து முடிக்க இன்னும் 30 மாதங்கள் ஆகும்.