
பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை சி.பி.எஸ்.இ. அனுப்பியுள்ளது.
அரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் பிரத்யாமன் தாகூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.
பாலியல் ரீதியாக சிறுவனிடம் தவறாக நடக்க முயன்றபோது மாணவனை கொலை செய்ததாக பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக் குமார் என்பரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்து சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். பள்ளி ஊழியர்கள் விவரங்களை காவல்துறை மூலம் சரிபார்க்க வேண்டும்.
பள்ளி வளாகத்திற்குள் வெளிநபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.