
கேபிள் கார் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டு ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமுற்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் பாபா பையத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலைப்பகுதியில் ரோப்வே செயல்பட்டு வருகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 40 பேர் சுமார் 12 கேபின்களில் சுமார் 16 மணி நேரமாக சிக்கி தவித்து வருகின்றனர். கேபிள் காரில் சிக்கித்தவித்தவர்களில் எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் இரண்டு Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளில் தற்போது இந்திய வான்படை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
கேபிள் கார்களில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. கேபிள் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சிகிச்சை:
விபத்து ஏற்பட்டதை அடுத்து ரோப் காரில் இருந்து தப்பிக்க கீழே குதித்த தம்பதியினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனினும், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். விபத்து களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் துணை கமிஷ்னர் மஞ்சுநாத் பஜந்த்ரி மற்றும் எஸ்.ஐ. சுபாஷ் சந்திரா தலைமையில் நடைபெற்று வருகிறது.
விளக்கம்:
விபத்து கள நிலவரம் குறித்து துணை கமிஷ்னர் மஞ்சுநாத் மஞ்சுந்த்ரி கூறும் போது "நிலைமை முழு கட்டுப்பாட்டுக்கு வந்து இருக்கிறது. இன்னும், சிலர் கேபிள் கார்களில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து சுற்றுலா பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்," என தெரிவித்தார்.
சுற்றுலா தளம்:
இந்தியாவின் மிக நீண்ட செங்குத்தான ரோப்வே இது என ஜார்கண்ட் சுற்றுலை துறை தெரிவித்து இருக்கிறது. இந்த ரோப்பே பாபா பையத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 766 மீட்டர்கள் ஆகும். மலைப்பகுதியில் மட்டும் 392 மீட்டர்கள் அதிகம் ஆகும். இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும்.