ராம நவமியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊர்வலத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்ததையடுத்து மத்திய பிரதேசம் கர்கோனின் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டங்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்துக் கடவுளான ராமர் பிறந்த நாளைக் கொண்டாடும் ராம நவமி விழா ஊர்வலத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஒலிபெருக்கில் இசையை இசைப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தலாப் சவுக் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்வீச்சு சம்பவங்களை தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் இர தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் ஊர்வலம் பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ஊர்வலம் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்ற போது, ஒலிபெருக்கியில் சத்தத்தை குறைக்க வேண்டும் என்று கூறி அங்கு இருக்கும் மக்கள் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிற்கு ஊர்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடந்தேறியுள்ளது.
பிறகு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் சில இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தும் காட்சிகளும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த வன்முறையில்,காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், நான்கு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து வன்முறை நிகழாமல் இருக்க, மத்தியப் பிரதேசத்தின் கார்கோனின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வன்முறை கலவரத்தில் இரண்டு போலீஸார் உட்பட7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று குஜராத்தில் கம்பாத் மற்றும் ஹிம்மநகரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்ட்ட கலவரம் காரணமாக வன்முறை வெடித்தன. இந்த இரண்டு பகுதிகளிலும் கல் வீச்சு தாக்குதல்களும் தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேற்கு வங்கம் ஹவுராவில் ஷிப்பூர் பகுதியில் ராம் நவமியை முன்னிட்டு ஊர்வலத்தின் போது மோதல்கள் ஏற்பட்டதாக கிடைத்த புகாரை அடுத்து,ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஜார்கண்ட் லோஹர்டகாவிலும் கல் வீச்சு தாக்குதல்களும் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பலரும் படுகாயமடைந்ததாகவும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.