
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடபெற அனைத்துக் கட்சிக்கு அழைப்பு : சுமித்ரா மகாஜன்!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்க, வரும் 30-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 9-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் பட்ஜெட் தாக்கல் நடவடிக்கைகளை மார்ச் 8-ஆம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், திட்டமிட்டபடி பிப்ரவரி மாதம் முதல் தேதியிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ரயில்வே பட்ஜெட்டை தனியாக அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டு, நடப்பாண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அண்மையில் நிறைவடைந்த குளிர்காலக் கூட்டத் தொடரைப் போல அல்லாமல், இந்தத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது எனவும், அதற்காக ஒத்துழைக்குமாறு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.