
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மேலாளரை 25 முறை செருப்பால் அடித்து,சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்வாட் விமானத்தில் பயணம் செய்யமுடியாத அளவுக்கு தடை கொண்டுவரப்பட உள்ளது.
ஏர்-இந்தியா விமானம் சார்பில் (“நோ-பிளைலிஸ்ட்”) விமானப் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற பட்டியலை உருவாக்க உள்ளது.
சர்வதேச அளவில் இதுபோல் பட்டியலை பல நாடுகளும் வைத்துள்ள நிலையில், அதுபோன்ற பட்டியலை உருவாக்கி, முதல் நபராக சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட் பெயர் சேர்க்கப்பட உள்ளது.
செருப்படி
சிவசேனா கட்சியின் எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்(வயது57). ஏர் இந்தியா விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்,
ஆனால், நேற்று புனேயில் இருந்து டெல்லி சென்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் “பிசினஸ்கிளாஸ்” இல்லாததால், “எக்னாமி கிளாசில்” எம்.பி. கெய்க்வாட்டுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த எம்.பி. கெய்க்வாட், விமான மேலாளர் சிவக்குமாரை செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் பயணிகள் மத்தியிலும், ஏர் இந்தியா நிர்வாகம் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடை பட்டியல்
இந்நிலையில், விமானத்தில் பிரச்சினை செய்பவர்கள், மரியாதைக் குறைவாக நடந்து கொள்பவர்கள், பயணிகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டு விமானத்திலும் பயனநிசெய்ய தடைவிதிக்கும் திட்டத்தை ஏர்-இந்தியா நிறுவனம் கொண்டு வர உள்ளது.
விமானப் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற பட்டியலைக் கொண்டு வந்து அதில் முதல் நபராக சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட் பெயர்சேர்க்கப்படும் என ஏர்இந்தியா விமானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விரைவில் தடை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ , “விமானத்தில் தரக்குறைவாக நடந்து கொள்ளும் நபர்கள் விமானப்பயணம் மேற்கொள்ள தடைசெய்ய, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. விமான ஊழியரை தாக்கியது தொடர்பாகவும், விமானம் தாமதமாக புறப்பட காரணமாக இருந்ததற்காகவும் சிவசேனா எம்.பி.மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
பயணம் செய்யமுடியாது
மத்திய அரசு கொண்டு வரவுள்ள விமானத்தில் பறக்க தடைசெய்யப்பட்ட நபர்கள் பட்டியலில் ஒருவர் பெயர் இடம் பெற்றால், அந்த நபர் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது பல ஆண்டுகளுக்கோ வெளிநாடுகளுக்கு செல்லமுடியாது, உள்நாட்டிலும் விமானப்பயணம் மேற்கொள்ள முடியாது.
இந்த திட்டத்தின் படி, அந்த குறிப்பிட்ட நபரின் பெயர், அடையாள அட்டை, பாஸ்போர்ட் எண், ஆகியவை குறிக்கப்பட்டுவிட்டால், எந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், அந்த குறிப்பிட்ட நபர் குறித்து எச்சரிக்கை செய்யும். அப்போது டிக்கெட் முன்பதிவு அந்த நபருக்கு தவிர்க்கப்படும்.
இந்த முறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இப்போது சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட் செயலுக்குபின் நம் நா்ட்டிலும் கொண்டுவரப்பட உள்ளது.
புகார்
மேலும், விமான ஊழியரை செருப்பால் அடித்தது தொடர்பாக சிவசேனா எம்.பி. கெய்க்வாட் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.