
காங்கிரஸ் கட்சியை வழி நடத்த தெரியாவிட்டால் துணைத்தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று விமர்சனம் செய்த கேரள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை கட்சி தலைமை நீக்கி உள்ளது.
விமர்சனம்
உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்ராகுல் காந்தி மீது கட்சியின் சில நிர்வாகிகள் விமர்சனம் செய்தனர்.
சர்ச்சைப் பதிவு
கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சி.ஆர். மகேஷ்என்பவரும் ராகுல் காந்தியை விமர்சித்து ‘பேஸ்புக்’கில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். அதில் அவர் வெளியிட்ட பதிவில் “
மகத்தான அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும், கேரளாவிலும் சரிவை சந்தித்து வருகிறது.
காங்கிரசின் வேர்கள் அறுந்து கொண்டிருப்பதை ராகுல்காந்தி கண் திறந்து பார்க்க வேண்டும். கட்சியை முறையாக வழி நடத்த தெரியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கேரளாவில் கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் காணப்படுகிறது. கட்சியின் மாநில தலைமை ராஜினாமா செய்து 2 வாரங்கள் ஆன பின்பும் இதுவரை புதிய தலைமை பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை’’ என தெரிவித்து இருந்தார்.
அதிர்ச்சி, நீக்கம்
கேரள இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் மகேசின் சர்ச்சைக் கருத்துக்கள் கட்சி தலைமையையும், மூத்த தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மகேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கட்சியின் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்டேன். இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. அரசியலில் நான், எதையும் சம்பாதிக்க வில்லை. சம்பாதிக்க வேண்டுமென்று விரும்பியதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.