
கடந்த 8-ந் தேதி முதல் நாடு முழவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் சரியான ஆவணங்களோடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறும் போது, மத்திய அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். கடந்த 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1- ந் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என தெரிகிறது.