
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை வரும் 17-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் அட்டையை கொண்டு வந்தது. அடுத்து வந்த மோடி அரசு ஆதார் அட்டை அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் கட்டாயமாக்கியது. காஸ் மானியம், வாகனங்கள் பதிவு செய்ய, வங்கிக்கணக்கு, ரேஷன் கார்டு என அனைத்திலும், அரசின் நலத் திட்டங்களுக்கும் கட்டாயாக்கி வருகிறது.
இதை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தொடரப்பட்டது. அதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற, ஆதார் அட்டை என்பது விருப்பத்தின் அடிப்படைதான், கட்டாயமாக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு ஆதார் அட்டை அரசின் திட்டங்களைப் பெற கட்டாயமாக்கி சட்டமியற்றியது.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர சாந்தா சின்ஹா சார்பில் , அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைமத்தியஅரசு கட்டாயப்படுத்துவதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், “ அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை விருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், அரசு, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் கல்வி உதவித்தொகை, மதிய உணவு உள்ளிட்டவைகளுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
மத்தய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்ததுதான், ஆதலால், 2நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது என்றார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முத்லாக் விவகாரத்தை விசாரணை செய்து வருகிறது. அதே அமர்வு இந்த மனுவை வரும் 17-ந் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.