6,000 என்.ஜி.ஓ.-க்களுக்கு ஆப்பு வைத்த மோடி அரசு… வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து..!

By manimegalai aFirst Published Jan 2, 2022, 9:02 AM IST
Highlights

உரிமங்களை புதுப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கியும், சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

உரிமங்களை புதுப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கியும், சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் (FCRA) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த உரிமத்தை உரிய கால இடைவெளியில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்க வேண்டும். அந்தவகையில் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருந்த அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.-க்களில் சுமார் 18,778 நிறுவனங்களின் உரிமம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியானது. அதில் 12,989 நிறுவனங்கள் மட்டும் உரிமத்தை புத்துப்பிக்க விண்ணப்பித்து இருந்தன.

ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருந்த 5,789 நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான FCRA உரிமம் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த 179 நிறுவனங்களின் விண்ணப்பங்களையும் உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதானால் இந்த நிறுவனங்களுக்குமான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கையால் சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தை இழந்துள்ளன. நேற்று முன்தினம் வரை சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த உரிமத்தை வைத்திருந்த நிலையில் தற்போது 16,829 நிறுவனங்களிடம் மட்டும் இந்த உரிமம் உள்ளது. என்.ஜி.ஓ.-க்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிட்த்துள்ளன.

வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான உரிமங்களை இழந்த பட்டியலில் இந்தியாவின் பிரபலமான என்.ஜி.ஓ.-க்கள், அமைப்புகள் இடம்பிடித்துள்ளன. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்துடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்திரா காந்தி தேசிய கலை மையம், இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், லால் பஹதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்பாம் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் உரிமத்தை இழந்துள்ளன. இந்திய மருத்துவச் சங்கம், இந்தியா முழுதும் 12-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நடத்திவரும் இமானுவேல் மருத்துவமனை சங்கம், இந்திய காசநோய் சங்கம், விஷ்வ தர்மயத்தன், மகரிஷி ஆயுர்வேத பிரதிஷ்தன், தேசிய மீனவ கூட்டுறவு கூட்டமைப்பு உள்ளிட்டவையும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமத்தை இழந்துள்ளன.

ஹம்தர்ட் எஜூகேஷன் சொசைட்டி, டெல்லி ஸ்கூல் ஆப் சோஷியல் வர்க் சொசைட்டி, பாரதிய சான்ஸ்க்ரிதி பரிஷத், டிஏவி காலேஜ் டிரஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் சொசைட்டி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், காத்ரேஜ் நினைவு அறக்கட்டளை, டெல்லி பப்ளிக் ஸ்கூல் சொசைட்டி, ஜேன்யூ அணு அறிவியல் மையம், இந்தியா ஹேபிடட் சென்டர் ஆகிய அமைப்புகளும் உரிமங்களை இழந்துள்ளன.

இந்தியாவில் செயல்படும் என்.ஜி.ஓ.-க்கள் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஆனால், அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களே காரணம் என்று ஆளும் தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று, இந்தியாவில் இந்த அமைப்புகள் போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என்பதும் அவர்களின் புகராகும். இந்தநிலையில், ஆறாயிரம் என்.ஜி.ஓ.-க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

click me!