கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. ராக்கிங்கை தடுப்பதற்கு இதுதான் வழி.. யுஜிசி அறிக்கை..

By Thanalakshmi VFirst Published Jan 1, 2022, 7:12 PM IST
Highlights

ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
 

ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக பல்கலை. துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் சம்பவங்களை தடுக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சில பரிந்துரைகளை யுஜிசி முன்வைக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, ராக்கிங் தடுப்பு குழு, தடுப்பு படை, தடுப்பு பிரிவு போன்றவற்றை ஏற்படுத்தி அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராக்கிங் தடுப்பு குழு தொடர்பான விவரங்களை கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.ராக்கிங் சம்பவம் நிகழாமல் தடுக்கும் வகையில், அந்த மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.

ராக்கிங் மற்றும் இதர விரும்பத்தகாத நிகழ்வுகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் விடுதி, கேண்டீன், ஓய்வு இல்லத்தில் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும். ராக்கிங் சம்பவங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

click me!