காஷ்மீரை உலுக்கிய பேரழிவு! கிஸ்ட்வார் மேக வெடிப்பில் 40 பேர் பலி, 220 பேர் மாயம்

Published : Aug 14, 2025, 07:54 PM IST
cloudburst in kashmir

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 220க்கும் மேற்பட்டோர் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய மேக வெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, பெரும் பேரழிவை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 2 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 220-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரம்

இந்தச் சம்பவம், இமயமலைப் பகுதியில் உள்ள மாதா சண்டி கோவிலுக்குச் செல்லும் மச்சைல் மாதா யாத்திரை பாதையில் நிகழ்ந்ததால், யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

முதலமைச்சர் ஓமர் அப்துல்லா:

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இந்த விபத்து குறித்து பேசினார். மேலும், "மேக வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து உறுதியான தகவல்கள் மெதுவாகவே வருகின்றன. இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து அனைத்து சாத்தியமான வளங்களும் மீட்புப் பணிகளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி:

இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "கிஸ்ட்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உண்டு. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவைப்படுபவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்:

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தச் சம்பவம் பெரும் உயிர் சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவித்தார். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, சேத மதிப்பீடு மற்றும் தேவையான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆளுநர் மனோஜ் சின்ஹா:

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சிவில், காவல்துறை, ராணுவம், என்டிஆர்எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரிகளுக்கு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பலப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து வந்த வீடியோக்களில், பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்படுவதையும், திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை அதிகாரிகள் பின்வாங்கிச் செல்லுமாறு எச்சரிப்பதையும் காண முடிகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி