உத்தராகண்டில் ஜோஷிமத் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு ஹோட்டல்களை அந்த மாநில அரசு முழுமையாக இடித்து தரைமட்டமாக்க முடிவு செய்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பல வீடுகள், உணவகங்கள், கோயில்கள் போன்ற பல கட்டடங்கள் சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளைத் துறந்துள்ளனர். அவர்களை அம்மாநில அரசு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், ஜோஷிமத்தில் அபாயகரமான நிலையில் உள்ள இரண்டு பெரிய ஹோட்டல்கள் இடிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமோலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலில் மவுண்ட் வியூ, மலாரி இன் ஆகிய இரண்டு ஹோட்டல்களையும் தகர்க்க உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவை அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டடங்களையும் உடனடியாக தகர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.
ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டட ஆய்வு நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் இரு ஹோட்டல்களிலும் ஆய்வு மேற்கொண்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லாமல் அந்தக் கட்டிடங்களைத் தரைமட்டமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் நடத்திய சோதனையில் சுமார் 100 வீடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் வசிப்பவர்களைப் உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் காந்தி நகர், சிங்தார், மனோகர் பாக், சுனில் ஆகிய பகுதிகளில் உள்ளதாகவும் மாவட்டம் நிர்வாகம் கூறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும் திங்கட்கிழமை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியைத் தொடர்பகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கவும் வேண்டிய உதவிகளை விரைவாகச் செய்யவும் அறிவுறுத்தினார்.
PM Modi medical expenses: பிரதமர் மோடி மருத்துவத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லையாம்!
இதனிடையே பிரதமர் அலுலவகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி. கே. மிஷ்லா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சரவைச் செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.