
ஆயிரம் ரூபாய் நோட்டின் ஆயுள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பழைய ஆயிரம் ரூபாயை பயன்படுத்தி இனி எந்த சேவையையும் பொருட்களையும் இன்று முதல் வாங்க முடியாது, வங்கிக் கவுன்ட்டர்களில் மாற்றவும் முடியாது. வங்கிக்கணக்கு உள்ளவர்கள் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
கடந்த 1938-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 1946-ல் திரும்பப் பெறப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்,கடந்த 1954-ம் ஆண்டு மீண்டும் ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் கடந்த 1978-ம் ஆண்டு ரூ.1000, ரூ.5000, ரூ10000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதன்பின் 22 ஆண்டுகளுக்குப் பின், 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ரூ.1000 நோட்டை மகாத்மா காந்தி உருவம் கொண்ட நோட்டுகள் அறிமுகமாகின. ஏறக்குறைய 16 ஆண்டுகள் மக்கள் மத்தியில் புழங்கி வந்த ரூ.1000 நோட்டு கடந்த 8-ந் தேதி தடை செய்யப்பட்டு திருப்பெறப்பட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்தமா நேற்றோடு அதன் மதிப்பு இழந்து காகிதமானது.