
உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.
உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின. செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக
தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.
பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள்.
அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.
வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர். படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும், ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.
தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர். சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர்.
அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள். சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது.
இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது.