5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓட்ஸி, இத்தாலி-ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் பனிப்பாறைகளில் புதையுண்டு கண்டெடுக்கப்பட்டார். வரலாற்று ஆய்வாளர்களுக்கு இவர் ஒரு பொக்கிஷம். அவரது உடல்நிலை, கடைசி உணவு, ஏன் அவரது உடலில் 61 பச்சை குத்தல்கள் இருந்தன என்பது வரை பல ரகசியங்களை இந்த மம்மி உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
மம்மியில் கிடைத்த அதிசயம்
ஐரோப்பிய மம்மி ஆய்வு நிறுவனத்தைச் (Institute for Mummy Studies at Eurac Research) சேர்ந்த விஞ்ஞானிகள், ஓட்ஸியின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தனர். -6 டிகிரி செல்சியஸ் குளிரிலும், பல ஆயிரம் ஆண்டுகளாக எப்படி நுண்ணுயிரிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதுதான் அவர்களின் முக்கிய கேள்வியாக இருந்தது. இந்த ஆய்வின் போதுதான், அந்த குளிரைத் தாங்கி வளரக்கூடிய நான்கு வகையான ஈஸ்ட் இனங்கள் கண்டறியப்பட்டன.