லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீப்பிடித்தது. விமானி சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலேயே பத்திரமாகத் தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானி சமயோசிதமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
23
நடுவானில் என்ஜினில் தீப்பற்றியது
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சிறிது நேரத்திலேயே அதன் இடது என்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
33
விமானியின் சாமர்த்தியம்
என்ஜினில் தீப்பிடித்ததால், விமானத்தை உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கே திருப்பி, விமானி பத்திரமாக தரையிறக்கினார். அங்கு தயார் நிலையில் இருந்த அவசரகால குழுவினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.