Syamantha Kiran weds Anand Selvan : ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலில் சீரியலில் நடித்து வரும் ஆனந்த் செல்வனும், விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா கிரணும் காதலித்து கல்யாணம் செய்துள்ளனர்.
சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தற்போது தொடர்கதை ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் நடித்த ரீல் ஜோடிகளே, பின்னாளில் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வெவ்வேறு சீரியல்களில் நடித்தவர்கள் காதலித்து திருமணம் செய்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி ஒரு திருமணம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. ஜீ தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
24
ஷியாமந்தா கிரண் - ஆனந்த் செல்வன் கல்யாணம்
அந்த ஜோடி வேறுயாருமில்லை, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடர் நடிகை ஷியாமந்தா கிரண் ஆகியோர் தான். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்கிற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த சீரியலில் ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே சீரியலில் கோதை என்கிற துணை நடிகை கதாபாத்திரத்தில் ஷியாமந்தா நடித்திருந்தார்.
34
காதல் டூ கல்யாணம்
அந்த சீரியலில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. சுமார் 7 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இன்று இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம் இன்று கோவையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சீரியல் நட்சத்திரங்களான பிக்பாஸ் பவித்ரா, பாக்கியலட்சுமி பிரபலம் ரித்திகா உள்பட ஏராளமான பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை ஷியாமந்தா கிரணுக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஆனால் இவரின் கணவர் ஆனந்த் செல்வனுக்கு 31 வயது தான் ஆகிறது. ஆனந்த் செல்வனை விட ஷியாமந்தா 7 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. ஷியாமந்தா நடித்துள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்கிற புத்தம் புதிய மெகா தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.